கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை! விவசாயிகள் அதிர்ச்சி…

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது அடித்தட்டு மற்றும் விவசாய மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் அந்தத் துறையின் பதிவாளர் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல ஆயிரம் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவுச் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு, கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. சில மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அமைப்புகளில் அரசியல் தலையீடுகளும் இருப்பதால் வங்கிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்று காரணம் தெரிவித்தது மத்திய அரசு. இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பும், சில சங்கங்கள் ஆதரவும் தெரிவித்துள்ளன

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமே பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகள் வேளாண் கடன் பெற்று வருகிறார்கள். அதே போல் விவசாயிகளுக்கான நகைக்கடன்களும் குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட வருவதால், கிராமப்புற பகுதிகளில் விவசாயிகளின் உயிர்நாடியாக இந்த கூட்டுறவு வங்கிகள் இருந்து வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கணினியில் நகைக்கடன் வழங்குவதற்கான செயலியும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அரசு ஆணையும் இதுகுறித்து வெளியிடாமல் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இது குறித்த விளக்கமும் வெளியிடப்படவில்லை

‘தமிழக அரசு இப்போதுள்ள நிதி நெருக்கடியில் நகைக்கடன் ரத்து செய்ய வாய்ப்பில்லை’ என்று ஏற்கெனவே நிதித்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்த அரசு தரப்பு முறையாக விளக்கம் தர வேண்டும்” என்கிறார்கள்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பலரும் நகையை அடைமானம் வைக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு வந்து, பணம் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் பரிதாபம் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நடந்து வருகிறது. அவர்களின் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.