நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறையலாம்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் நாளை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கணிசமான அளவுக்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. அதன்படி கடந்த 15ந் தேதி மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 50.68 டாலராக இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் கச்சா எண்ணெய் விலை மளமளவென சரிந்து தற்போது பீப்பாய் ஒன்று 28 டாலராக உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் குறைக்கவாய்ப்புள்ளது. கணிசமான அளவு விலை குறைக்கப்படும் என்றும் இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.