நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது
240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது.
இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது.
கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. 601 உறுப்பினர்களில், 507 பேர், புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கினர்.
இந்நிலையில், இந்த புதிய அரசியல் சாசனம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அந்நாட்டு அதிபர், ராம்பரன் யாதவ், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அனைவரும் ஒற்றுமையோடு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார்.
நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும், மதச்சாற்பற்ற நாடாக நேபாளம் இருக்கும் என்று புதிய அரசியல் சாசனம் கூறுகிறது.
இந்த சாசனத்தின் அடிப்படையில் கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு நேபாளம் ஏழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, புதிய எல்லைகள் வகுக்கப்படும். ஒட்டு மொத்த அதிகாரங்கள், மத்திய அரசின் வசம் இருந்தாலும், மற்ற அதிகாரங்கள், மாகாண அரசுகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். இதற்கான பணிகள் ஓராண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து நாடான நேபாளத்தை, மதச் சார்பற்ற நாடாக அறிவிப்பதற்கு, இந்து ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை
நேபாளத்தை மதசார்பற்ற நாடாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தில் வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
நேபாளத்தின் புதிய அரசியல் சாசனம் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்து நாடாக இருந்த நேபாளத்தை மதசார்பற்ற நாடாக மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் புதிய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றன. புதிய அரசியல் சாசனத்தை நேபாள அதிபர் ராம்சரண் ராம் பரண் யாதவ் பிரகடனப்படுத்தினார்.
புதிய அரசியல் சாசன அமல்படுத்தப்பட்டதையொட்டி தலைநகர் காத்மாண்ட் உள்ளிட்ட இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், நேபாளத்தை மறுபடியும் இந்து நாடாக அறிவிக்க வலியுறுத்தியும் கூடுதல் மாகாணங்களை ஏற்படுத்த வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்துகொளுத்தப்பட்டன.