புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது:

”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சிறு கடன்கள் வழங்குவதற்காக 58 கோடி ரூபாய் அமுத சுரபி நிதியாக நடப்பாண்டில் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

ஒரு பகுதியில் ஒரே வகை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழில் குழுவிற்கும் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள், அங்காடி வசதிகள் மற்றும் தனித் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதற்காக ஊக்க நிதி வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் ஒரே தொழிலை மேற்கொள்ளும் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட குழுவிற்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 1500 ஒத்த தொழில் குழுக்களுக்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வகையில் 600 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடி ரூபாய் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறிய தொழில்களை தொடங்கி வாழ்வாதாரம் பெற வழி வகுக்கும்.

மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் சுய உதவிக் குழுக்களை தமிழக அரசு 1991-ஆம் ஆண்டு உருவாக்கியது. ஆண்டு தோறும் புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதுவரை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இல்லாத ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர்களைக் கொண்டு 10,000 சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்த ஆண்டு அமைக்கப்படும். இந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதன் வாயிலாக பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கடன் சுமைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு 20,270 கோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது .இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …