போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான அமிதாப் தாக்குருக்கும் மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய அமிதாப் தாக்கூர், தனக்கும் முலாயம் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடினார். அடுத்த சில மணி நேரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து முலாயம் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லக்னோ தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.