சகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்? கருணாநிதி கேள்வி

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன்? என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த முறைகேட்டில் என்னென்ன தவறுகள் நடந்தன? எப்படிப்பட்ட பரிமாற்றங்கள் நடந்தன என்பதை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத் தானே, உயர் நீதி மன்ற நீதிபதிகள், சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அவர் அந்த முறைகேடுகள் பற்றிய அறிக்கையை நீதி மன்றத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

தீர்ப்பு கொடுத்தது உயர் நீதி மன்ற நீதிபதி! எனவே பதிலளிக்க வேண்டியது அங்கே தான். ஆனால் முதல்வர் பன்னீர் செல்வமோ எனக்குப் பதில் சொல்லியிருக்கிறார். சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கே என்ன சொன்னார்கள்? சகாயம் விசாரணைக் கமிஷன் விரைவில் நடைபெற வேண்டுமென்று உயர் நீதி மன்றம் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். அந்தத் தீர்ப்புக்குக் காரணம் யார்? உயர் நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, சகாயம் கமிஷனை இயங்க விட்டிருந்தால், உச்ச நீதி மன்றத்தில் தலைகுனிந்து “குட்டு” வாங்கியிருக்க வேண்டாம் அல்லவா? உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகாவது, அ.தி.மு.க. அரசு, சகாயம் விசாரணைக் கமிஷனை நடத்த  விட்டிருக்கலாம் அல்லவா? அதற்குப் பிறகும் உயர் நீதி மன்றத்திலே அ.தி.மு.க. அரசு தானே சீராய்வு மனு தாக்கல் செய்தது.

அதிலே தான் உயர் நீதி மன்ற நீதிபதிகள், சகாயம் கமிஷன் விசாரணையை நான்கு நாட்களில் அமைத்து ஆணையிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்களே? அது அரசுக்குப் பெருமை தருகின்ற செயலா? இந்த நிலை யாரால் ஏற்பட்டது? என்னாலா ஏற்பட்டது? இத்தகைய நெருக்கடி வளையத்திற்குள் சிக்கிக் கொண்ட பிறகு, பன்னீர் அரசு வேறு வழியின்றி இறங்கி வந்திருக்கிறது. அதுவும் நான்கு நாட்கள் அலட்சியமாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் நேற்றையதினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  அலுவலகத்தில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், கனிம வளத்துறை தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில்

“உயர் நீதி மன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளதாம். இது இன்று காலையில் ஒரு நாளேட்டில் மட்டும் செய்தியாக வந்துள்ளது.

சகாயம் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்த போதே, அதிமுக அரசு நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி, நேற்று வெளியிட்ட உத்தரவை அப்போதே வெளியிட்டிருந்தால், நீதி மன்றத்தின் கண்டனத்திற்கும், அபராதத்திற்கும் ஆளாகி வெட்கக் கேடான ஒரு நிலையை உருவாக்கி இருக்க வேண்டாமல்லவா? இதைத் தான் நான் என் அறிக்கையில் கேட்டிருந்தேன். அதற்கு என்னை வசைபாடி, எதற்கும் வாய் திறக்காத பன்னீர் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

கழக ஆட்சிக் காலத்தில், ஒரு பத்திரிகையில் அவதூறான செய்தி வந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இரண்டே நாட்களில் அறிக்கை பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது? 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், கிரானைட் முறைகேடு பற்றிய அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டார் என்றும், அதற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 19-5-2012 அனுப்பினார் என்றும் பன்னீர்செல்வம் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறார்.

அதாவது 2011ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஜெயலலிதாஅறிக்கை கேட்டதற்கு, ஓராண்டு கழித்து 2012ஆம் ஆண்டு மே மாதம் தான் மாவட்ட ஆட்சித் தலைவர், அ.தி.மு.க. ஆட்சியிலே அறிக்கை அனுப்பினார் என்று பன்னீர்செல்வமே ஜெயலலிதா ஆட்சிக்குச் “சான்றிதழ்” கொடுத்திருப்பதும் அவருடைய அறிக்கையிலே தெளிவாகிறது.

கிரானைட் முறைகேட்டினைச் சட்டப் பூர்வமாகத் தகர்த்தெறியத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா எடுத்தார் என்றும் தன்  அறிக்கையில் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். அப்படி நடவடிக்கை எடுத்தது உண்மையானால், நேர்மையான அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில்  விசாரணை நடத்த வேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகளும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்திட இவ்வளவு கால தாமதம் ஏன்? இதுதான் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்ததற்கான அடையாளமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *