வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது. இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது.
கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. இப்போது வரக்கூடிய கண் நோய் புதிய வகையில் உள்ளது. கண்ணின் கருவிழி பாதிக்கக்கூடிய கண் நோயாக உள்ளது. கண் நோய் வந்தால் 3 அல்லது 5 நாட்களில் சரியாகி விடும்.
ஆனால் அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சொட்டு மருந்து வாங்கி தன்னிச்சையாக போடக்கூடாது. கண் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் நோய் எளிதில் வரக்கூடும். கண் நோய் பாதித்தவர்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் பயன் படுத்திய கைக்குட்டை, துணிகளை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது.