பிரபாகரன் தற்கொலை செய்துதான் இறந்தார்: கருணா பரபரப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்த கருணா, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்; தான் பிரபாகரனுக்கு அடுத்ததாக ராணுவ தளபதியாக இருந்தேன்; எனக்கு கீழ்தான் பிற தளபதிகள் இருந்தனர் என்றெல்லாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இறுதிப் போரின் போது பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி உயிரிழந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்டதாக உறுதியான தகவல் உண்டு.

இதையடுத்து இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிரபாகரன் தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

வலது கை பழக்கம் உள்ள பிரபாகரன், இடப் பக்கத்தில் இருந்த கைத் துப்பாக்கியை வலது கையால் எடுத்து நெற்றிப் பொட்டின் மீது வைத்து சுட்டிருந்ததால்தான் அவரது தலை பிளவுபட்டுள்ளது.

நிச்சயமாக இலங்கை இராணுவத்திடம் உயிரோடு பிடிபடும் சூழ்நிலையை பிரபாகரன் விரும்பமாட்டார். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

ராசபட்சவைப் பொறுத்தவரை தமது ஆட்சிக் காலத்தில் இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போய்விட்டார் எனவும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …