வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விட்டது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சிலர் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.
அதேபோல், பருப்பு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பருப்பு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதையெல்லாம் தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. அதன்விளைவாக கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ. 100க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு இப்போது ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பு விலை இதே காலக்கட்டத்தில் 90 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. தனியா மல்லி விலை 70 ரூபாயிலிருந்து 135 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இவற்றின் விலை உயர்வுக்கும் போதிய விளைச்சலின்மை மற்றும் பதுக்கல் தான் முக்கியக் காரணம் ஆகும்.
வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வது தான் பொது வழங்கல் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழகத்தின் பொதுவழங்கல் துறை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்காகத் தான் பண்ணை பசுமைக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் போதிலும், அது பெயருக்காக மிகக்குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை; வெளிச்சந்தையில் எந்தவித சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் போய்விடும்.
எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி