தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி, அவரது 64ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எனது பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்த எனது நண்பர்களும், நல விரும்பிகளும் திட்டமிட்டு வருவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து நான் கேள்விப்படுகிறேன். எனினும், எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதற்குப் பதிலாக, உங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுங்கள். ஜம்மு-காஷ்மீரின் சகோதர, சகோதரிகளுக்கு நாம் தோளோடு தோள் நின்று உதவுவதே இப்போதைய தேவையாகும்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 17ஆம் தேதி குஜராத் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு நாம் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். அன்று எனது பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் நடைபெறாது என்று மோடி தெரிவித்துள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி