விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து செந்திலிடம் கேட்டபோது திருமணம் நடந்தது உண்மை தான் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : ”சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்புக்காக நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இதை நேரில் பார்த்த ஸ்ரீஜா குடும்பத்தினர் அப்போது அதனை விரும்பவில்லை. சீரியல் என்றால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே? விளம்பரத்திற்காக, நிஜத்தில் நடப்பது போலவே திருமணம் நடத்த வேண்டுமா ?என்று கேட்டனர்.
ஆனால், அப்போதெல்லாம் கூட எங்களுக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. நாளடைவில், ‘நிஜமாகவே நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன?’ என்று நண்பர்களும், யூனிட்டிலும் கேட்க ஆரம்பித்தார்கள். பிறகுதான், எங்கள் வீட்டார் மட்டுமின்றி, ஸ்ரீஜாவின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்கள். எங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே காதல் என்று எதுவும் இல்லை. ரசிகர்களின் விருப்பம் தான் எங்கள் கல்யாணத்தில் நிறைவேறியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை(02,07,2014) எளிமையாக திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர், திருவல்லாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினோம். சம்பிரதாய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, முறைப்படி அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தோம். அதற்குள், திருமணத்துக்கு வந்த ஒரு சில நண்பர்கள் நாங்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியிட்டு விட்டார்கள். வேறு வழியின்றி, அதே நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் திருமணத் தகவலை உங்களிடம் தெரிவிக்கிறோம்.” என்று கூறியிருக்கிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி