இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதோடு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய புதிய நாடொன்றை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக இலங்கை அதிபர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை மிகவும் எளிமையான முறையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த மாதம் 1ம் தேதி 15ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 14 இடங்களை வென்றிருந்தது.

தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி