ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு மே 19ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

[pullquote]இவர்கள் இருவரும் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.[/pullquote]

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பிறகு 93-94 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, ஏப்ரல் பத்தாம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை, வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு, ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், வழக்கை முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேலும் கால அவகாசம் பெறப்பட்டது. அந்த உத்தரவை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜெயலலிதா தரப்பினர், தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை வழக்கை ஒத்திவக்கும்படி கோரினர். அதன்படி வழக்கு மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் எப்போது நேரில் ஆஜராக வேண்டுமென்பது அப்போது முடிவுசெய்யப்படும் என நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

Check Also

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *