இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை நாடாளாவிய ரீதியில் பெரும் பிரச்சனையாக இருந்ததாக கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், இம்முறை 130 என்ற அளவிலேயே அது தொடர்பான முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவை மக்களை மோசமாக பாதிக்கும் அளவில் இல்லை என்றும் ஹெட்டியாராச்சி கூறினார்.
கடந்த காலங்களில் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பெருமளவு அரச வளங்கள் விரயம் செய்யப்பட்டதாகவும். அப்படியான 150 அளவான முறைப்பாடுகளே இம்முறை இருப்பதாகவும் பெஃப்ரல் அமைப்பின் இயக்குநர் கூறினார்.
‘ஒப்பீட்டு அளவில் இம்முறை தேர்தல்கால நடவடிக்கைள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருந்துள்ளன. இந்த விடயத்தில் தேர்தல் ஆணையாளரின் நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது’ என்றார் ரோஹண ஹெட்டியாராச்சி.
20 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்
தேர்தல்கால முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் 500க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 12க்கும் அதிகமான வேட்பாளர்களும் இம்முறை கைதாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் கண்காணிப்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் நாடாளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் பெஃப்ரல் அமைப்பு கூறியது.
‘வாக்குகள் எண்ணப்படுவதையும் நாங்கள் இந்த முறை மேற்பார்வை செய்வோம்’ என்றும் கூறினார் ரோஹண ஹெட்டியாராச்சி.
2010 தேர்தலின்போது, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தலையீடுகள், அச்சுறுத்தல்கள் இருப்பதாக முறைப்பாடுகள் இருந்தன.
‘ஆனால், இம்முறை இராணுவத் தரப்பில் ஒருவர் கூட தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சிவில் பாதுகாப்பு படையணி மீது கடந்த தடவை முறைப்பாடுகள் இருந்தன, இம்முறை அப்படி எதுவும் இல்லை. இராணுவத்தினர் இம்முறை தேர்தல் விடயங்களில் அக்கறை காட்டவில்லை’ என்றார் பெஃப்ரல் இயக்குநர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி