கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வைத்த வாதத்தில், ‘கிரானைட் குவாரிகள், கனிம குவாரிகள் தொடர்பாக 90 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. 77 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சகாயம் தலைமையிலான குழு அமைப்பது தேவையற்றது’ என தெரிவித்தார்.
தமிழக அரசின் வாதத்துக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, “அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், தமிழகத்தில் பரவலாக சட்டவிரோதமான கிரானைட், கனிம குவாரிகள் முறைகேடுகள் நடைபெற்றுவதை உறுதி செய்துள்ளது. இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.
சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும். ஆகையால், சகாயம் குழுவுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
