ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் கத்தி.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 அமைப்புகள் ஒன்றாக இணைந்து கத்தி படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.
ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கு ராஜபக்சேவுடன் தொடர்பில்லை என்று கூறிவிட்டு படத்தின் இசை வெளியீட்டை நடத்த தேதியையும் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 18-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடப்பதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து முற்போக்கு மாணவர் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மாறன் நடிகர் விஜய் மற்றும் கத்தி குழுவுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,
“இறுதியான எச்சரிக்கை… சிங்களவனின் கைக்கூலி என்று அடையாளப்படுத்தபட்ட லைகா நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் நீங்கள் நடத்தும் பாடல் வெளியீடு விழா சுலபமாக நடந்துவிடாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் படத்தின் சுவரொட்டி தயார்படுத்தி உள்ளீர்களோ இல்லையோ நாங்கள் இந்த விடயத்தை தமிழகம் முழுக்க எடுத்து செல்ல தயார் நிலையில் உள்ளோம். நீங்கள் பாடலை வெளியிட்டவுடன் தமிழகம் முழுக்க உங்களின் தமிழினதிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். இந்தப் படமே உங்களுக்கான கடைசி படமாக இருக்கும்! முற்போக்கு மாணவர் முன்னணி” –
என குறிப்பிடப்பட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி