தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மே மாதம் 26-ம் தேதியன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6-ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
ஜூன் 6-ல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜுன் 16-ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்தும் அடுத்த விசாரணையை 16-ம் தேதி (இன்றைக்கு) ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடையை நீட்டிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
சிவில் வழக்குக்காக கிரிமினல் வழக்கு விசாரணையை நிறுத்தத் தேவையில்லை என நீதிபதிகள் மனு தள்ளுபடி குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய லெக்ஸ் நிறுவன மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி