ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.

இதனிடையே, அமெரிக்காவில் வெளியாகும் “வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையில் மோடி எழுதியுள்ள கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் செழிப்பாக வாழும் அமெரிக்கவாழ் இந்தியச் சமூகம், இந்திய-அமெரிக்க கூட்டுப் பங்களிப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டதன் மூலமாக, இரு நாடுகளும் பல வெற்றிகளைக் கண்டுள்ளோம்.
ஆசிய, பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தீவிரவாதத்தை ஒழித்தல், கடல் பகுதிகளை பாதுகாத்தல், இணையதள குற்றத் தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி எனப் பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும் வலிமை பெற்றுள்ளன.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வலிமையைப் பயன்படுத்தி உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உலகளாவிய பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு சர்வதேச அளவில் மேலும் பல முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட முடியும்.
இன்றைய மின்னணு யுகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் கொண்டுள்ள வலிமை, மக்களை வழிநடத்துவதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா உந்து சக்தியாக விளங்குகிறது என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி