தனியார் பள்ளி சார்பாக குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு…

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் 5 லட்சம் பேர் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஓட்டுனர்கள் என சுமார் 5 லட்சம் பேர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் வீட்டின் முன்பாக அமர்ந்து அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி எதிர்வரும் 10-06-2027 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.

உலகம் முழுவதும் கொரானா எனும் கொடிய நோய் தொற்றுக் கிருமி காரணமாக லட்சக்கணக்கானோர் மாண்டுபோயும் தொழில் நிறுவனங்கள் நலிந்துபோயும் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை செயல்படாமல் மூடியே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகிகள் சுமார் 5 லட்சம் பேர் குறைந்தபட்ச சம்பளம் கூட இல்லாமல் வாழ வழியின்றி வேறு வேலை இன்றி பட்டினியால் வாடும் கொடுமையை போக்க…

தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் வரை மாதம்தோறும் வாழ்வாதார நிதியாக ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசை வலியுறுத்துவதற்காக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த பட்டினிப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

தனியார் பள்ளிகள் திறக்காத போது மாணவர்கள் சேர்க்கை செய்யாதபோது புதிய பழைய கட்டணத்தை வசூலிக்காதபோது ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஆன்லைன் வகுப்புகள்கூட நடத்த முடியாமல் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. தனியார் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தட்ட முடியாமல் பலரும் தற்கொலை செய்து உள்ளனர்.

எனவே தமிழக அரசு அவர்கள் வாழ்வாதார நிதியாக ரூபாய் பத்தாயிரம் தரவேண்டும் என்று பலமுறை மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும்
செவிசாய்க்காததால் இந்த பட்டினிப் போராட்டம் முன்னெடுத்துள்ளோம். தமிழகத்தில் பல துறையை சார்ந்த வர்களுக்கும் அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வாழ்வாதார நிதியாக தற்போது தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தரவேண்டும். தனியார் பள்ளி ஆசிர்களுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் நல வாரியம் அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் நலனை பேணிக் காக்க வேண்டும் என்பதற்காக அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சமூக இடைவெளியோடு யாருக்கும் பாதகம் இல்லாமல் அவரவர்கள் வீட்டிலிருந்தே வீட்டின் முன்பாக அமர்ந்து கோரிக்கை பதாகைகளை தாங்கி பட்டினிப் போராட்டத்தை நடத்துவதென்று முடிவு எடுத்திருக்கிறோம்.

மேலும் அவர் கூறுகையில், தனியார் பள்ளிகள் 2018-2019 அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25 சதவீத மாணவர்களை சேர்த்திட்ட வகையில் தமிழ்நாடு முழுக்க நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 40% கல்வி கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்குரிய கல்வி கட்டண பாக்கி முழுமையாக நிலுவையில் உள்ளது. அந்த கல்வி கட்டணத்தை கொடுத்தாலாவது ஆசிரியர்களுக்கு சம்பளம் தரலாம். அதையும் தராமல் நிறுத்தி வைத்துள்ளது

அரசு தனியார் பள்ளிகளுக்கு இந்த கொடுமையான காலத்திலாவது வட்டியில்லா கடனாக தந்தாலாவது ஆசிரியர் சம்பளத்தை தந்துவிடலாம். நாங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை தந்து விடுவோம். அல்லது அரசே ஆசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைத்து விடலாம். எங்கள் பள்ளியின் வரவு செலவுகள் அனைத்தும் வங்கிகளுக்கு தெரியும் அதை வைத்துக் கொண்டு பள்ளிகளுக்கு கடனாக தந்தாலாவது ஆசிரியர் சம்பளத்தை தந்தால் அவர்கள் பட்டிணியை போக்கலாம். அதுவும் செய்யவில்லை என்பதால் தான் இந்த பட்டினி போராட்டம்.

பள்ளி வாகனங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாலையில் ஓடாத நிலையிலும் பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி சாலை வரி இன்சூரன்ஸ் கட்டி தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆர்.டி.ஓ.க்கள் மிரட்டி வருவதை கைவிட வற்புறுத்தியும், தனியார் பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தையும் உடனடியாக எந்தவித நிர்ப்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கு புதுப்பித்துத் தரக்கோரியும், இந்த ஆண்டு மட்டும்மாவது இ.பி.எஃப், இ.எஸ்.ஐ. மறறும் சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும்,

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆறாம் வகுப்பு தொடர்ந்து தோய்வு இல்லாமல் தொடர்ந்து படிக்க நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு தொடர்ந்து நடத்திட அரசு அனுமதி தர வேண்டியும் நடைபெறும் இந்த பட்டினிப் போராட்டத்தில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …