திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சுவாமிகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து, திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர், மேலக்கோயில் சேர்ந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், திங்கள்கிழமை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடையும்.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி