தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய கடிதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் செய்தி வெளியான போது, அதனை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கண்டித்ததை முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆனால், இதனை மிஞ்சும் வகையில், பிரதமர் உடனான தனது சந்திப்பை இளங்கோவன் அருவருக்கத்தக்க முறையில் விமர்சித்துள்ளதாகவும், இதனைப் பொறுத்துக் கொள்ளாத அதிமுக தொண்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் எதிரொலியாக தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இளங்கோவன் அறிக்கை வெளியிட்டதையும், இதில் இருந்தே தமது செயல்பாடு நாகரிகமற்றது என்பதை இளங்கோவனே மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனியும் அதிமுக தொண்டர்கள் தொடர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி