பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைகழகம் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக திருவான்மியூருக்கு அதிகாலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் தடம் எண் T-70 (கோயம்பேடு – திருவான்மியூர்) என்ற பஸ் இயக்கப்படுகிறது.
இதேபோல், பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப் பேட்டை, அண்ணா பல்கலைக் கழகம் வழியாக பிராட்வேக்கு 10 நிமிட இடைவெளியில் தடம் எண் 21G (பெருங்களத்தூர் – பிராட்வே) என்ற சிறப்பு பஸ்கள் தினமும் அதிகாலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது.
இதுதவிர ஏற்கெனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தி.நகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 300 மாநகர பஸ்கள் அண்ணா பல்கலைக்கழகம் வழியாக இயக்கப் படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி